search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லித்தோப்பு அண்ணா நகர்"

    நெல்லித்தோப்பு அண்ணா நகரில் என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் திருடிய வாலிபர் 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 7-வது குறுக்கு தெருவில் துளசி அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் மகேந்திரன் (வயது 28). சிவில் என்ஜினீயர்.

    இவர், கடந்த மார்ச் மாதம் வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் வாசலில் ஷூவில் மறைத்து விட்டு வேலை வி‌ஷயமாக பெங்களூர் சென்றார்.

    பின்னர் வீடு திரும்பிய போது, பீரோலில் வைத்திருந்த 8 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் ரூ.82 ஆயிரம் ரொக்க பணத்தை காணாமல் மகேந்திரன் திடுக்கிட்டார்.

    யாரோ வீட்டில் சாவியை மறைத்து வைத்து விட்டு சென்றதை நோட்டமிட்டு நகை- பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மகேந்திரன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உருளையன் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் குயவர்பாளையம் லெனின் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து முறையாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த சுந்தர் என்ற டேனியல் (32) என்பதும், இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு என்ஜினீயர் மகேந்திரன் வீட்டில் நகை- பணத்தை திருடி சென்றவர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இவர் மீது இதே போன்று யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு சென்றதாக 11 இடங்களிலும், மதுரை உள்பட பல இடங்களில் நகை- பணத்தை கொள்ளையடித்த வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து டேனியலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 பவுன் செயின், வெள்ளி கொலுசு மற்றும் செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×